Tuesday, 6 October 2015

பாலியல் கல்வி காலத்தின் தேவை ---- இரா.உமா

வாழ்க்கையின் மிக இனிமையான பருவம் என்றால், அது பதின்பருவம் என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். குழந்தை பருவம் மகிழ்ச்சியானது. வாழ்க்கையை துய்க்கத் தொடங்குகின்ற பதின்பருவம்தான் இனிமையான பருவம். இந்த வயதில் உலகமே தன்னைச் சுற்றி மட்டுமே இயங்குவதாகத் தோன்றும். பார்க்கின்ற அத்தனையும் அழகாக இருப்பதாக மனதும், கண்களும் காட்டும். ஆனால் இந்த வயதில்தான் பிள்ளைகளை ஆபத்துகளும் அதிகமாகச் சூழும் என்பதை நாம் உணரவேண்டும்.
இன்று நம் குழந்தைகள் சந்திக்கும் மிகப்பெரிய சிக்கலாக, பாலியல் துன்புறுத்தல்கள், பாலியல் வல்லுறவுகள் போன்றவை இருக்கின்றன. வயது வந்த வளர்ந்த குழந்தைகள்தான் என்றில்லாமல், சின்னஞ்சிறு குழந்தைகள் கூட இக்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.
நடைபாதைகளிலும், தெருவோரங்களிலும் இருக்கின்ற, ஆதரவற்ற குழந்தைகள்தான் பாலியல் ரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர் என்று கருதிவிட வேண்டாம். தாய், தந்தையரின் அரவணைப்பில், வீட்டிற்குள் வளர்கின்ற குழந்தைகளும் இதுபோன்ற தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர். அன்றாடம் செய்தித்தாள்களில் இதுபற்றி படிக்க நேரும்போது, பேரதிர்ச்சி நம்மைத் தாக்குகிறது.
வீடுதான் பாதுகாப்பானது என்று கருதிக் கொண்டிருந்த நமக்கு, இந்த செய்திகள் அதிர்ச்சியைத் தருவது வியப்பில்லையே. வீடும், அவர்கள் ஓடியாடி விளையாடுகின்ற தெருவும் அவர்களுக்குப் பாதுகாப்பற்ற நிலையை உருவாக்குகின்றன என்றால், உறவினர்கள், நண்பர்கள் மூலமும் ஆபத்து காத்திருக்கிறது என்று தெரியவரும்போது, எப்படித்தான் நம் குழந்தைகளை, நம் செல்வங்களைப் பாதுகாப்பது?
குழந்தைகளிடம் தங்கள் வக்கிரத்தைக் காட்டும், மிருகங்களை (மிருகங்கள் கோபித்துக் கொள்ளுமோ?!) சட்டங்கள் சில நேரங்களில் தண்டித்தாலும், முழுமையாகத் தடுக்க முடியாது என்பதுதான் நடைமுறை உண்மை. இது ஒருபக்கம் இருந்தாலும், நம்முடைய சொத்துக்களை நாம் தானே பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
அதற்கு என்ன செய்ய வேண்டும்?
நம்முடைய குழந்தைகளுக்கு உடலியல் பற்றிய அறிவியல் உண்மைகளைச் சொல்லித்தர வேண்டும். குழந்தை உளவியல் நிபுணர்கள் சொல்வதைப் போல, கெட்ட தொடுதல் எது, நல்ல தொடுதல் எது என்பதைக் குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும். அவர்களுடைய உடல் மீது அவர்களுக்கு உள்ள உரிமையை, அந்நியர்களின் அத்துமீறலை எப்படித் தடுப்பது என்பதையயல்லாம் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
இதையயல்லாம் யார் சொல்லிக் கொடுப்பது?
வேறு யார், பெற்றோர்களும் ஆசிரியர்களும்தான்! அவர்கள் தானே குழந்தைகளுக்கு நெருக்க மானவர்கள். படித்த பெற்றோர்களாக இருந்தால், பெண் பிள்ளைகளிடம் ஓரளவுக்குப் பக்குவமாக இவற்றையயல்லாம் புரியவைத்துவிடுவார்கள். பகல் முழுவதும் கூலிவேலைக்குப் போய்விட்டு, இரவில் வந்து உணவு சமைக்கும் நிலையில் இருப்பவர்களால் இது முடியுமா?
இதற்குத்தான் பள்ளியிலேயே பாலியல் கல்வி என்பதை ஒரு பாடமாகவே வைக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். இது இன்று நேற்று முன்வைக்கப்பட்ட கருத்தன்று. பல ஆண்டுகளாகவே பாலியல் கல்வி என்பது கல்வியாளர்களால் வற்புறுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் பழமைவாதிகளும், கலாச்சாரக் காவலர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களும் இதை எதிர்த்து வருகின்றனர். காரணம் இதைப் பற்றிய சரியான புரிதல் இல்லாததுதான்.
அண்மையில் நாடாளுமன்றத்தில், குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. உடலுறவுக்கான அங்கீகரிக்கப்பட்ட வயது வரம்பு 16லிருந்து 18ஆக உயர்த்தப்பட்டிருப்பதாக அது தெரிவிக்கிறது. இது தொடர்பாக தில்லி அமர்வு நீதிமன்றம் ஒரு சிறப்பான கருத்தினைக் கூறியிருக்கிறது. ‘18 வயதுக்குக் கீழே உள்ள ஒரு ஆணும், பெண்ணும் விரும்பி உடலுறவு கொண்டாலும் அவர்களைக் குற்றவாளிகளாகக் கருதித் தண்டிக்க இந்தச் சட்ட முன்மொழிவு வகை செய்கிறது. பெற்றோர்களும், காவல்துறையினரும் அவர்களைத் துன்புறுத்தவே அது பயன்படும். 16, 17 வயதில் உடலுறவு பற்றிய புரிதல் இருக்காது என்பது இந்தக் காலத்துக்குப் பொருந்தாது. அவர்களுக்குப் புரிதல் இருக்கிறது என்பதே உண்மை நிலவரம். எனவே வயது வரம்பை உயர்த்துவது இந்தப் பிரச்சினையை எந்த வகையிலும் தீர்க்காது. நல்ல பழக்கங்களையும், நல்லது கெட்டதை உணரும் சக்தியையும் குழந்தைகளிடம் சட்டங்களால் உருவாக்கிவிட முடியாது. பள்ளிக்கூடங்களில் பாலியல் கல்வியைக் கொண்டு வந்து, பொறுப்பைப் பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் விடுவதுதான் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் வழி ’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
(இந்தத் தீர்ப்பு வெளியான பிறகு, சட்ட முன்மொழிவு நிறைவேற்றப்பட்டுச் சட்டமாகவே ஆகிவிட்டது)
பாலியல் வன்கொடுமைகள் என்பதை இருபால் குழந்தைகளும் எதிர்கொண்டு வருகின்றனர். எனவே பள்ளிகளில் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும்போதுதான் குழந்தைகளின் மீதான இந்த வன்முறைகள் தடுக்கப்படும்.
ஆனால் பாலியல் கல்வி என்றதும், ‘அய்யய்யோ பிள்ளைகள் கெட்டுப் போவார்கள். நம் நாட்டுக் கலாச்சாரம், பண்பாடு என்னாவது’ என்றெல்லாம் கூச்சலிடுபவர்கள் பாலியல் கல்வி என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
பாலியல் கல்வி என்றால் உடற்கூறு அமைப்பினைச் சொல்லி, அவற்றைப் பாதுகாக்கும் வழிகளைச் சொல்லி, நம் உடல் மீது நமக்கிருக்கும் உரிமையைச் சொல்லி, இந்த உரிமைக்குள் அந்நியர்கள் அத்துமீறி நுழைந்தால் அவர்களை எதிர்கொள்வது எப்படி என்பதையயல்லாம் சொல்லிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் உளவியல் சார்ந்த அடிப்படைப் பாடம் அவ்வளவுதான்.
இதில் பிள்ளைகள் கெட்டுப்போவதற்கு என்ன இருக்கிறது. ஒரு தவளையின் உடற்கூறைப் பற்றிப் படிக்கும் போது, நம்முடைய உடற்கூறைத் தெரிந்து கொள்வதில் என்ன தவறு? பாலியல் கல்வி என்றதும், ஏதோ உடலுறவு பற்றிச் சொல்வது என்பது போன்ற தவறான தோற்றத்தைப் படித்தவர்களே ஏற்படுத்துவதுதான் கொடுமை. திரைப்படங்களும், இணையத்தளங்களும் ஆண், பெண் பால் உறவு பற்றிய செய்திகளைத் தாராளமாகக் கடைவிரித்து வைத்திருக்கின்றன. இவற்றிலிருந்துதான் நம்முடைய பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டியதிருக்கிறது. அதற்கும் இந்தப் பாலியல் கல்வி உதவியாக இருக்குமே தவிர, பிள்ளைகளைக் கெடுத்துவிடாது.
நாங்கள் எல்லாம் சின்னப்பிள்ளையிலேயே இதெல்லாம் தெரிந்தா வளர்ந்தோம். அதெல்லாம் உரிய வயது வரும்போது அவர்களாகவே தெரிந்து கொள்வார்கள் என்று வியாக்கியானம் பேசுபவர்களும் இருக்கிறார்கள். அறிவு சொல்லாத பாடத்தை அனுபவம் சொல்லும் என்பது உண்மைதான். ஆனால் இந்தப் பிரச்சினைக்கு அது பொருந்தாது. பிள்ளைகளைத் தவறான பாதைக்குக் கூட்டிச் சென்றுவிடும்.
உடற்கூறுகளைப் பற்றிய அவர்களின் சந்தேகங்களுக்குக் கோபப்படாமல், பொறுமையாக, சரியான பதில்களைச் சொல்லிவிட்டால் போதும். அதற்கு முதலில் நாம் தயாராக வேண்டும். நமக்குத் தெரியாத விளக்கங்களை உரிய மருத்துவர்களிடம் பெற்றுப் பிள்ளைகளுக்குச் சொல்லலாம், அல்லது அவர்களையே மருத்துவர்களிடம் நேரிடையாக அழைத்துச் சென்று தெளிவுபெற வைக்கலாம்.
குழந்தைகள் விளையாட்டாகக் கேட்கிறார்கள், இதைப்போய் பெரிதாக எடுத்துக்கொண்டு, இந்த அசிங்கத்தை எல்லாம் இப்போதே சொல்வதா என்று அலட்சியப்படுத்தினால், தங்கள் சந்தேகத்திற்குரிய விளக்கங்களை வெளியில் தேடத் தொடங்குவார்கள். அந்தத் தேடலில், தவறான விளக்கங்களும், வழிகாட்டல்களும் இருந்துவிட வாய்ப்புகள் அதிகம்.
எனவே இத்தனை சிக்கல்களுக்கும், உளவியலை உள்ளடக்கிய அறிவியல் விளக்கங்களுடன் விடை சொல்வதே பாலியல் கல்வி. நீதிநெறி வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று சொல்பவர்கள், பாலியல் கல்வி வேண்டும் என்று சொல்ல முன்வருவதில்லை. ஆனால் பள்ளிக்கூடங்களில் பாலியல் கல்வி கட்டாயம் வேண்டும் என்பது காலத்தின் தேவையாய் இருக்கிறது.
குஜராத்தில் ஆபாசக் கல்வி - காலத்தின் கொடுமை
அனைவருக்கும் கல்வி என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ், குஜராத் அரசு சார்பில், தொடக்க நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, “பஜ்ஜில் மேஜிக்” என்ற புத்தகம் வழங்கப்பட்டது.
50 பக்கங்கள் கொண்ட இப்புத்தகங்கள், 35 ஆயிரம் தொடக்க நிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இப்புத்தகத்தில் நகைச்சுவை என்ற பெயரில் படுகேவலமான, ஆபாசமான (நகைச்சுவை?) துணுக்குகள் மாணவச் சிறார்களின் மனத்தில், நச்சுப் பாலியல் வக்கிரங்களைத் திணிக்க முயன்றுள்ளன.
மனைவி: நேற்றிரவு ஷீலாவுடன் சந்தோசமாக இருக்க எவ்வளவு பணம் கொடுத்தாய்?
கணவன்: நூறு ரூபாய் கொடுத்தேன்
மனைவி: அவமானம்! அவளின் கணவன் என்னிடம் வரும்போது, ஐம்பது ரூபாய் மட்டுமே கொடுத்தான்.
கடவுள் நம்பிக்கையுள்ள, கடைந்தெடுத்து இந்துத்துவவாதி மோடியின் அரசாங்கம் பிஞ்சுகளுக்குக் கற்றுத் தருகின்ற கல்வியின் தரம் எப்படி இருக்கிறது பாருங்கள்.
இப்படிப்பட்ட மதவாதிகள்தான் அறிவியல் கல்வியான பாலியல் கல்விக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

குறுக்கே பாயும் பார்ப்பன மூளை --- இரா.உமா

அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தின் மீதான தாக்குதலை ஜெயலலிதா இன்னும் கைவிடவில்லை. முதலில், மாற்ற நினைத்தார். முடியவில்லை. இப்போது சிதைக்க முயல்கிறார்.
கல்வியாளர்களும், அறிவியலாளர்களும், ஆய்வாளர்களும், மாணவர்களும் தங்கள் அறிவை விரிவு செய்வதற்கு, நாள்தோறும் நாடி வரும் நூலகச் சோலையாம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை, திருமண மண்டபமாக்கி வாடகைக்கு விட்டிருக்கிறது ஜெயலலிதாவின் அரசு. ஜுலை ஒன்றாம் தேதி அந்நூலக அரங்கத்தில் ஒரு திருமணம் நடந்திருக்கிறது.
நீதிமன்றத்தின் கவனத்திற்கு இதனை எடுத்துச் சென்றபோது, ‘நூலகங்களில் உள்ள அரங்கங்களை, கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்று விதிமுறைகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் திருமண நிகழ்ச்சிக்கு வாடகைக்கு விட்டது ஏன்’ என்று அதிகாரிகளிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ‘நூலகத்தை நடத்தப் போதிய பணம் இல்லை. அதனால்தான் திருமண நிகழ்ச்சிக்கு வாடகைக்கு விடுகிறோம்’ என்று விடையளித்திருக்கின்றனர்.
நீதிபதிகள் இப்பொறுப்பற்ற செயலைக் கடுமையாகக் கண்டித்த துடன், ஒன்பதாம் தேதிக்கு வாங்கப் பட்ட முன்பணத்தையும் உடனே திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும், இனிமேல் நூலக அரங்கத்தை திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.
ஏற்கனவே திருமணமானவர் களுக்கும், குழந்தை பெற்றவர்களுக்கும் ‘விலை இல்லாத’ (அம்மாவின் புதிய கண்டுபிடிப்பு) திருமணங்கள் நடத்தி வைக்கவும், அன்னதானத் திட்டத்திற்கும் செலவழிக்க முடிகிறபோது நூலகத்தைப் பராமரிக்கப் பணம் இல்லை என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.
ஓராண்டு சாதனை என்று சொல்லி, அரசுப் பணத்தை வாரியிறைத்து, நாளிதழ்களில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் கொடுக்கத் தெரிந்தவர் களுக்கு, ஏழை எளிய மக்களுக்குப் பயன்படும் நூலகத்தைப் பராமரிப்பதற்குப் பணம் ஒதுக்க மனம் வரவில்லை என்பதுதான் உண்மை.
ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கூட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் என்.ஆர்.சிவபதி(தமிழகப் பள்ளிக் கல்வி-விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்), தமிழகத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா ‘கல்விப் புரட்சி’யை ஏற்படுத்தி வருகிறார் என்று கூறியிருக்கிறார். 
மாணவர்களுக்கு விலையில்லா நோட்டுப் புத்தகங்கள், பென்சில், புத்தகப் பை, காலணி எல்லாம் தருகிறாராம் ஜெயலலிதா. அதைத்தான் மாண்புமிகு அமைச்சர் கல்விப்புரட்சி என்கிறார் போலும். அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெறத் தொடங்கியிருக்கும் காலகட்டத்தில், ஓர் அரசு இதைக்கூடச் செய்யவில்லை என்றால் எப்படி? ஆனால் இன்றைய கல்வி முறையானது, வெறும் மனப்பாடம் செய்து மதிப்பெண் பெற வைக்கின்ற, மாணவர்களைப் பந்தயக் குதிரைகளாக்குகின்ற மோசமான கல்வி முறை என்பதைக் கல்வியாளர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர். அதையும் தாண்டி, நம் பிள்ளைகள் சுயமாகச் சிந்திக்கவும், இன உணர்வும், மொழி உணர்வும் பெற்று, உலக அரங்கில் வல்லுனர்களாக வலம்வரவும் நூலகங்களே அவர்களுக்கு உதவுகின்ற உற்ற நண்பன் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது.
மரங்களை வெட்டிக் கடத்துபவர்கள், ஆற்றின் அடியில் அடித்துச் செல்லப்படும் பெரிய மரத் துண்டுகளை மறைக்க, மேலே மரத்தூள்களைத் தூவுவார்களாம். ஜெயலலிதாவின் கல்விப் புரட்சியும் அந்த வகையாகத்தான் தெரிகிறது.
கடந்த மாதம் பாவாணர் நூலக அரங்கத்தில் நடைபெறவிருந்த ஓர் இலக்கியக் கூட்டத்தை (பத்திரிகையாளர் சின்னக்குத்தூசியார் பிறந்தநாள் நிகழ்ச்சி) நடத்தவிடாமல் இடையூறு செய்தது ஜெயா அரசு. இப்போது, அண்ணா நூலக அரங்கத்தைத் திருமண நிகழ்ச்சிக்கு வாடகைக்கு விட்டிருக்கிறது. இந்த வெட்கக்கேட்டை என்னவென்று சொல்வது.
தனக்கென ஒரு நாடு, மரபு வழிப்பட்ட வரலாறு, தொன்மங்கள் என எதையும் கொண்டிராத ஆரியம், தன் பிழைப்புக்காக, மாற்றார் வரலாறுகளை, தொன்மங்களை உள்வாங்கிச் செறித்தும், திரித்தும் வந்திருக்கிறது. அது முடியாத சூழலில் சிதைக்கவும் தயங்கியதில்லை.
இன்று தமிழ்நாட்டில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. சமச்சீர்க் கல்வியை எதிர்த்தனர். தமிழ்ப்புத்தாண்டை தையிலிருந்து சித்திரைக்கு மாற்றினர்.
அண்ணா நூற்றாண்டு நூலகம் ஜெயலலிதாவின் நெஞ்சில் முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கிறது. இதில் நேரடியாக எதுவும் செய்யமுடியாது என்பதை நன்கு உணர்ந்து கொண்டார். அதனால்தான், பார்ப்பன மூளை குறுக்கு வழியைக் கையாளத் தொடங்கியிருக்கிறது.
எந்த ஒன்றும் பயன்பாட்டில் தொடர்ந்து இருந்தால்தான் நிலைத்து நிற்கும். இல்லையயன்றால் அழிந்து விடும். இந்த வாய்ப்பாட்டைத்தான் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் வந்தேறி ஜெயா செயல்படுத்தி வருகிறார்.
எட்டு ஏக்கர் நிலப்பரப்பில், எட்டு மாடிகளோடு அமைந்திருக்கும் இந்நூலகத்தில், 12 இலட்சம் நூல்கள் வைப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தொடங்கும் போதே, ஐந்தரை லட்சம் நூல்களோடு தொடங்கப்பட்டது. கூடிய விரைவில், மீதமுள்ள ஆறரை லட்சம் நூல்களும் வாங்கி வைக்கப்படும் என்று அன்றைய அரசு சொல்லியிருந்தது. நூலகத்தையே சிதைத்து ஒன்றுமில்லாமல் செய்துவிடத் துடிக்கும் ஜெயலலிதா, மேலும் புதிய நூல்களை வாங்கி வைப்பாரா? பாரதிதாசன் செம்மொழி நூலகத்திலிருந்த ஆயிரக்கணக்கான நூல்களுக்கு நேர்ந்த கதியைத்தான் நாம் அறிவோமே. இன்னொரு யாழ் நூலகத் துயரத்தைத் தமிழினம் சந்திக்கும்படிச் செய்துவிடுவாரோ ஜெயலலிதா என்ற அச்சம் ஏற்படுகிறது.
நூலகத்திற்கு வாங்கப்படும் பருவ இதழ்களிலும் கை வைத்திருக்கிறார்கள். சில குறிப்பிட்ட பருவ இதழ்கள் வாங்குவது நிறுத்தப்பட்டு வருகின்றன என்று தெரிய வருகிறது. நாட்டு நடப்புகளை, அரசின் செயல்பாடுகளின் பின்னால் இருக்கின்ற அரசியலைத் தத்தம் கொள்கைகளின் அடிப்படையில் அலசி ஆராய்ந்து செய்திகளை மக்களுக்குத் தருபவை பருவ இதழ்கள். மக்கள் எதையும் தெரிந்து கொள்ள முடியாமல் தடுப்பது பாசிச அரசியல். அதைத்தான் ஜெயலலிதா செய்து வருகிறார்.
வேலை செய்வதற்கு எப்படி நல்ல சூழல் வேண்டுமோ, அப்படிப் படிப்பதற்கும் மிக நல்ல சூழல் முக்கியம். காற்று, வெளிச்சம் போன்றவை போதுமானவையாக இருக்க வேண்டும். அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குள் ஒளி வெள்ளம் பாய்கின்ற வகையில் விளக்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முழுவதும் குளிரூட்டப்பட்ட படிப்பறைகளில் எந்தவிதத் தொந்தரவும் இல்லாமல் படிக்கமுடியும். காலையில் நூலகத்திற்குள் நுழைந்தால், வெளி உலகையே மறந்து இரவு வரை அங்கேயே அமர்ந்து படித்துக் கொண்டிருக்கத் தோன்றும். காலை முதல் இரவு வரை ஓரிடத்தில் இருக்கின்ற போது, கழிப்பறை வசதி மிக மிகத் தேவையான ஒன்றாகிறது. அதை மனத்தில் கொண்டே அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், கழிப்பறைகள் நவீனமாகவும், மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
பொதுவாக, சுத்தமான கழிவறை வசதி இல்லாத பொதுஇடங்களுக்கு மக்கள் செல்ல விரும்புவதில்லை. நூலகத்தைச் சிதைத்தல் என்னும் தன்னுடைய திட்டத்தின் ஒரு பகுதியாகக் கழிப்பறைப் பராமரிப்பில் அக்கறை காட்டாமல் இருக்கிறது ஜெயா அரசு. ஒரு நாளைக்கு ஆயிரக்கணக் கானவர்கள் வந்து போகும் இடத்தில், கழிப்பறைப் பராமரிப்பு என்பது மிக மிக முக்கியம் என்பது அரசுக்குத் தெரியாதா? அப்படியிருந்தும், நூலகத்தில் இப்படி ஒரு சுகாதாரமற்ற சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கின்ற ஜெயா அரசின் நோக்கம் நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. கழிப்பறைகள் சுத்தமாக இருந்தால்தானே நீண்ட நேரம் நூலகத்தில் இருந்து படிப்பார்கள். கழிப்பறைகள் சுத்தமின்றி இருந்தால், படிக்கும் நேரம் குறைந்து, படிப்படியாக வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிடும். பிறகு பயன்பாடில்லாத நூலகம் என்று சொல்லி மூடுவிழா நடத்துவது எளிதாகிவிடும் அல்லவா?
தனியார் கல்வி நிறுவனங்களில் பெரிய அளவில் தரமான நூல்களுடன் கூடிய நூலகங்கள் இருக்கின்றன. ஆனால் அரசுக் கல்வி நிறுவனங்களில் அந்த வசதி இல்லை. அங்கு படிக்கும் ஏழை மாணவர்கள் அரசு நடத்தும் நூலகங்களையே தங்களின் ஆராய்ச்சிக்கும், மேற்படிப்புக்கும் நம்பியிருக்கின்றனர். அந்தப் பிள்ளைகளுக்கு, அண்ணா நூற்றாண்டு நூலகம் ஒரு வேடந்தாங்கல் போன்றது. பொருளாதார, அரசியல் வல்லுனர் களாகவும், கல்வியாளர்களாகவும், அறிவியல் கண்டுபிடிப்பாளர்களாகவும் தமிழர்கள் உருவா வதற்கு இந்நூலகம் அடித்தளமிடும் என்பதை யாரும் மறுக்க முடியாது.
அம்மையாரின் ஓராண்டு ஆட்சியிலேயே, ஓராயிரம் முறை நீதிமன்றம் தலையிட்டுத் தமிழ்நாட்டு மக்களின் நலன்களைக் காப்பாற்றி இருக்கிறது. இன்னும் மிச்சமிருக்கின்ற நான்காண்டு களுக்கு, எதிர்க்கட்சியினரும், ஜனநாயக அமைப்புகளும், மக்களும் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய தேவையை, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை திருமண மண்டபமாக்கிய அம்மையாரின் ஆணவச் செயல் மீண்டும் ஒரு முறை உணர்த்தி இருக்கிறது.

நாங்கள் தருகிறோம் 69ம் 27ம் --- - இரா.உமா

நூல் அறிமுகம் - லட்சுமிக்குட்டி (கவிதை நூல்)
ஆசிரியர் : கண்மணிராசா, நியூ செஞ்சுரி புத்தக நிலையம், 41 - பி, சிட்கோ தொழிற்பேட்டை
அம்பத்தூர், சென்னை - 98.
விலை : ரூ.40
kanamanirasa_450நியூ செஞ்சுரி புத்தக நிலையம் வெளியிட்டுள்ள ஒரு சிறு கவிதை நூல் லட்சுமிக்குட்டி. நூலின் தலைப்புக்கு ஏற்ப, கையடக்க அளவில், ஆனால் 100 பக்கங்களுக்கு மேல் கொண்ட குட்டியான நூலாக இருக்கிறது. ஆனால் கவிதைகள் ஒவ்வொன்றும் நூறாண்டுகளின் வரலாறுகளைப் பேசுகின்றன. இந்நூலின் ஆசிரியர் கண்மணிராசா, ஒரு பஞ்சாலைத் தொழிலாளி. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் உழைப்பாளி. பாட்டாளி வர்கத்தின் பாடுகள், ஏக்கங்கள், குழந்தையின் உலகம், இடஒதுக்கீடு, பெண்ணியம், ஈழத்து துயரம், காதல் என பல்வேறு பொருள்களில் அழகான கவிதைகளை எளிமையான சொற்களில் எழுதியிருக்கிறார்.
குழந்தைகளின் உலகம் அதிசயங்களாலும், கற்பனைகளாலும் ஆனது. அவர்கள் உலகத்தில், பறவைகளும், விலங்குகளும் பேசும். அங்கே மனிதர்கள் பெரும்பாலும் இருக்க மாட்டார்கள். அதிலும் பெரியவர்களைக் கண்டிப்பாக அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். குழந்தைகள், பறவைகள், விலங்குகள், மரம், செடி, கொடி ஆகியனவற்றால் ஆகிய அழகான உலகம் அவர்களுடையது. இந்நூலில் சில கவிதைகள் அவ்வுலகத்தைக் கொஞ்சம் நமக்கும் காட்டுகின்றன.
எல்லாவற்றையும்
ஏற்றிக்கொண்டு
புதுவீடு நோக்கிப்
புறப்பட்டது வண்டி
சுவரில்
அவள் வரைந்திருந்த
வாத்தையும்
சுமையுந்தில்
ஏற்றச் சொல்லி
அழத் தொடங்கினாள்
லட்சுமிக்குட்டி
அம்மாவின் அன்பைச் சொல்லச் சொற்கள் தேவையில்லை என்பதை ஒரு குழந்தையின் குரலில் சொல்லும் கவிதை நம்மை நெகிழவைக்கிறது.
கடுதாசி எழுத
ஆட்கள்
கிடைக்காவிட்டால்
பரவாயில்லை
வெறும்
காகிதங்களை
மட்டுமாவது
அனுப்பு அம்மா...!
எனக்குப் புரியும்
ஏதுமற்ற காகிதத்தில்
எல்லாமுமாய்
நிறைந்திருக்கும்
உன் அன்பு
இப்ப யாருங்க சாதியயல்லாம் பார்க்குறா என்று கேட்பவர்களைக் காணும்போது, முகத்தில் காறித்துப்பிவிடத் தோன்றும். திருவண்ணாமலை மாவட்டம் ஆடையூர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இருவரைப் பள்ளியில் சேர்த்ததால், உயர்சாதிப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்துவிட்டனர். தாழ்த்தப்பட்ட பெண்கள் சமைத்த உணவைத் தங்கள் பிள்ளைகளைச் சாப்பிடவிட மாட்டோம் என்று பல அங்கன்வாடிகளில் சாதித்தீ பற்ற வைத்த தீண்டாமை எரிகிறது. தீண்டாமையும் சாதியமும் புதுப்புது வடிவங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஊருக்குள் செருப்பணிந்து நடந்த பாட்டனைக் கட்டிவைத்து அடித்த வலியை, பேரனுக்குச் சொல்கிறது இந்தக் கவிதை,
புழுக்கமாய் இருந்தாலும்
பரவாயில்லை
பூட்ஸ் - ஐ
அணிந்துகொள்...!
எவ்வளவு நேரமானாலும்
பரவாயில்லை,
மேலத்தெரு வழியாகவே
பள்ளிக்குப் போ...!
அங்குதான்
காலணி அணிந்ததற்காய்க்
கட்டி வைத்து அடித்தார்கள்...
உன் பாட்டனை.
கவிஞர் என்றால் காதலைப் பாடாமலா... உழைக்கும் மக்களின் காதலைச் சொல்லும் கவிதை,
விதவிதமாய்
மலர்களைச் சூடிக்கொள்கிறாய்...!
என்னை வீழ்த்த
உன் வியர்வை வாசம் போதும்
என்பதறியாமல்!
தந்தை பெரியார் அன்றே திராவிடர் கழகத்தின் கல்வி நிலையங்களில் பார்ப்பனர்களுக்கு மூன்று விழுக்காடு இட ஒதுக்கீடு தந்தார் எனக் கூறுவார்கள். கண்மணி ராசாவும் அவர்களுக்கு மிக நியாயமாக இடஒதுக்கீடு வழங்குகிறார்,
69ம் 27ம்
தர
உங்களுக்குக் கசக்கிறது.
நாங்களாவது தருகிறோம்
வாருங்கள்...!
மயிர் திருத்த
மலம் அள்ள
வீதி கூட்ட
அழுக்கை வெளுக்க
காலணி தைக்க - எங்கள்
காலனியில் வசிக்க !
இப்படி ஏராளமான கவிதைகள் இந்நூலில் பூத்துக் குலுங்கி வெடித்துக் கிடக்கின்றன கரிசல்காட்டின் பருத்திச் செடிகளைப் போல. ஒரு கவிஞனுக்கே உரிய அறச்சீற்றமும், சமூக அக்கறையும், மனிதநேயமும் கண்மணிராசாவின் கவிதைகளில் தெறிக்கின்றன.
செவியில் மட்டுமல்ல
செவிட்டிலும் விழும்
நல்ல கவிதை
என்கிறார் கவிஞர்.
செவியிலும், செவிட்டிலும் மட்டுமல்ல, சிந்தனையிலும் விழுகின்றன.
.


மீண்டும் வேண்டும் மொழிப்போர்! ---- இரா.உமா

டாக்டர் ஆர். நாகசாமி எழுதிய Mirror of Tamil and Sanskrit என்னும் நூல் தமிழறிஞர்களின் சினத்திற்கும், கடும் கண்டனத்திற்கும் ஆளாகி இருக்கிறது. இவர் 1970இல் கலைஞர் முதல்வராக இருந்தபோது தொடங்கப்பட்ட மாநில தொல்பொருள் ஆய்வுத்துறையின் முதல் இயக்குனராகப் பதவி வகித்தவர். அவ்வப்போது கட்டுரைகள், நூல்கள் சிலவற்றை எழுதியிருக்கிறார். அவற்றில் பல விவாதத்திற்குரியவையாகவே இருந்திருக்கின்றன. அந்த வரிசையில் இந்நூல் இப்போது வெளிவந்திருக்கிறது.
அய்ம்பதாயிம் ஆண்டுகள் தொன்மையுடைய தமிழ் மொழியை, தமிழ் இன வரலாற்றை, தமிழ்ப்பண்பாட்டை அப்படியே திரித்துக் கூறியிருக்கிறார் நாகசாமி. சான்றுகள் இன்றி, அதைப் பற்றிய எந்தக் கவலையுமின்றி, வெறும் புனைவுகளால் இந்நூலை நிறைத்திருப்பது, ‘எந்நூலின்’ வளர்ச்சிக்காக என்பதை அறியாதவர்கள் அல்லர் நாம். எனவேதான் இதுபோன்ற வரலாற்றுப் புரட்டுவேலைகள் இனியும் தொடரக்கூடாது என்று எச்சரிக்கும் வகையில், தமிழறிஞர்களின் கண்டனக் கூட்டம், 27.07.2012 அன்று மாலை, சென்னை, எழும்பூரிலுள்ள இக்சா மையத்தில் நடைபெற்றது. முனைவர் பொற்கோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மேனாள் துணைவேந்தர்கள், முதுபெரும் தமிழறிஞர்கள், தொல்லியல், மொழியியல் ஆய்வறிஞர்கள், பேராசிரியர்கள், தமிழ்த்துறை மாணவர்கள் ஆகியோர் பங்கேற்றனர். அவ்வரங்கில், மறத்தமிழ்ப்பெரியோர்களுடைய அறத்தமிழ்ச் சீற்றப்பொழிவின் சுருக்கம் இங்கே:-
முனைவர் பொற்கோ ( மேனாள் துணை வேந்தர்)
‘இந்தியா ஒன்றாக இருக்கட்டும்; வடமொழி மதிக்கப்பட வேண்டும்; வைதீக நெறி மதிக்கப்பட வேண்டும்; தமிழும் இருக்கட்டும். நீங்கள் வடமொழி மேலாதிக்கத்தையும், வைதீக மேலாதிக்கத் தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அது உங்களுக்கு நல்லதுதான்’ - இதுதான் நாகசாமி எழுதியுள்ள இந்நூலின் சாரம். நூலின் தலைப்பில்தான் தமிழ் இருக்கிறதே தவிர, நூலுக்குள் வடமொழியும், வைதீக நெறிகளும்தான் உயர்வாகப் பேசப்பட்டி ருக்கின்றன. தமிழும், தமிழர் நாகரிகத்தின் பெருமையும் எந்த இடத்திலும் பேசப்படவில்லை. தொல்காப்பியர் காலம் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டுதான். அதற்கு முன்னால் போக முடியாது என்று சொல்கிறார். எந்தச் சான்றும் காட்டவில்லை. இவர் சொல்லியிருக்கின்ற செய்திகள் அடிப்படையற்றவை என்றுதான் சொல்ல வேண்டும்.
இதுமட்டுமின்றி சங்க இலக்கியங்கள் எல்லாம் சமயச் சார்புடையவை என்று சொல்கிறார். ஆனால் அவை எல்லாம் சமயச் சார்பற்றவை என்று நிறுவப் பட்டுள்ளன. பிராமி என்னும் எழுத்தை பிராமணர்கள்தான் கண்டுபிடித்தார்கள் என்கிறார். அசோகர் மற்றும் புத்தமதம் பற்றி இவர் சொல்லும் பகுதி நம்மைத் திடுக்கிட வைக்கிறது. அசோகர் புத்த மதத்தைப் பரப்பவில்லை, அசோகனுக்கும் பிராமணர்களுக்கும் எவ்வித விரோதமும் இல்லை. அசோகன் பிராமணர்களை மதித்திருக்கிறான், பாராட்டியிருக்கிறான் என்று எழுதுகிறார். அப்படி என்றால் அசோகரின் பேரன் பிருத்கிருதனை, புஷ்யமித்ர சுங்கன் என்னும் பிராமணன் வெட்டிக் கொன்றது ஏன்? ஒரு நேர்மையான ஆய்வாளர் என்றால் இதற்கு விளக்கம் சொல்லியிருக்க வேண்டாமா? இன்னும் ஒரு படி மேலே போய் அசோசன் காஞ்சிபுரம் வரை ஆண்டான் என்கிறார்.
பிராமணர்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், மிக உயர்வாகவும், ஆர்வத்துடனும் பேசுகிறார். மற்றவர்களுக்கு வெறி இருக்கிறது, அதாவது தமிழ்வெறி, சாதி வெறி இருக்கிறது என்று சொல்கிறார். 63 நாயன்மார்களில் 13 பேர் பிராமணர்கள் என்று இவர் கணக்கிட்டுக் காட்டுகிறார். நாம் இதுவரை இப்படி கணக்கிட்டி ருக்கிறோமா? அனைவரையும் நாயன்மார்கள் என்றுதான் பார்த்தோம். இனிமேல் நாமும் இதுபோன்று கணக்குகளைப் பார்க்க வேண்டுமோ என்னவோ தெரியவில்லை.
தவறான காலக்கணக்குகளையும் காட்டுகிறார். பிராமியிலிருந்துதான் எல்லாமே வந்தது என்கிறார். தொல்காப்பியத்தில்தான் எழுத்து பற்றி, வரிவடிவம் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. தொல்காப்பி யத்திற்கு முன் எழுத்துவடியில் எந்த நூலும் இல்லை என்பது நிறுவப்பட்ட உண்மை. அசோகனின் எழுத்து கி.மு. 3ஆம் நூற்றாண்டு. தொல்காப்பியர் காலம் கி.மு.5லிருந்து 7வரை கணக்கிடக்கூடியது என்பதற்கு நாம் ஏராளமான சான்றுகள் தந்திருக்கிறோம். ஆனால் இவர் எந்தச் சான்றுகளும் தராமல், தொல்காப்பியர் காலத்தைப் பின்னால் கொண்டு வருகிறார். சென்னைப் பல்கலைக்கழகத்தில், இலக்கணம் தொடர்பாக நடந்த அகில இந்தியக் கருத்தரங்கில், தொன்மையான இலக்கண ஆசிரியர்களில் தொல்காப்பியரே காலத்தால் முந்தியவர் எனச் சான்றுகளைக் காட்டி பதிவு செய்திருக்கிறேன்.
இவை எல்லாவற்றையும் விடக் கேலிக்குரியது, தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலே இல்லை (பார்வையாளர்களின் பலத்த சிரிப்பொலி) என்று எழுதியிருக்கிறார். வரலாறானாலும், கல்வெட்டுகளா னாலும் ஆராய்ந்து பார்க்காமல் எந்த முடிவையும் சொல்லக்கூடாது. ஏனென்றால், மகேந்திரவர்மன் தன் கல்வெட்டில் 23ஆம் புலிகேசியைத் தான் வென்றதாகக் குறிப்பிடுகிறான். அதேபோல் மகேந்திரவர்மனைத் தான் வென்றதாக புலிகேசி தன்னுடைய கல்வெட்டில் குறிப்பிடுகிறான். ஆய்வு முடிவுகள் வேறு பல செய்திகளைத் தருகின்றன. இவற்றை, வ.சு.ப. மாணிக்கனாரும், மீனாட்சி அம்மையாரும், ‘பல்லவர் வரலாறு’ என்னும் தங்கள் நூலில் எழுதியிருக்கிறார்கள். எனவே எதையும் ஆராயாமல் சொல்வதும், மனம்போன போக்கில் எழுதுவதும் சிறிதும் நாணயமில்லாத செயல், கடுமையான கண்டனத்திற்குரியது. மொத்தத்தில் இவருடைய கல்வெட்டு வாசிப்பு அறிவியல் தன்மையற்றது (unscientific reading) என்றே நான் சொல்வேன்.
நடனகாசிநாதன் (முன்னாள் இயக்குனர், தொல்பொருள் ஆய்வுத்துறை)
அவர்கள் எப்போதும் நம்மை அறிவிலிகள் என்றே பட்டவர்த்தனமாகச் சொல்லி வருகிறார்கள். நம் மதிப்பிற்குரிய ஐ.மகாதேவன் அவர்கள் குகைக் கல்வெட்டுகள் என்று ஒரு பெரிய புத்தகத்தை எழுதினார். அவர் அந்த நூலின் தலைப்பை Old Tamil Inscription என்றுதான் வைத்திருந்தார். ஆனால் உள்ளே எல்லா இடங்களிலும் தமிழ் பிராமி என்றுதான் குறிப்பிடுகிறார். இவர்கள் எழுதும் நூல்களின் தலைப்பைப் பார்த்தால், தமிழுக்கு, தமிழர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருப்பவர்கள், பாண்டித்தியம் பெற்றவர்கள், உலக அரங்கில் தமிழைப் பரப்புபவர்கள் என்றொரு எண்ணத்தை, மாயையை ஏற்படுத்திவிடுவார்கள். அத்தனை கெட்டிக்காரர்கள்.
நாகசாமியின் நூல் ஆங்கிலத்தில் இருக்கிறது. நம்மிடையே ஆங்கிலப் புலமை பெற்ற தமிழறிஞர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் இந்நூலுக்குத் தக்க சான்றுகளுடன் முழுமையானதொரு மறுப்பை வெளியிட வேண்டும். அதை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும். இல்லையயன்றால் தமிழைப்பற்றிய தவறான கருத்துகள் வெளிநாட்டவரிடையே ஏற்பட்டுவிடும்.
அசோகர் காலத்திலோ அல்லது அதற்கு முன்போ தமிழகத்தில் படித்தறியக்கூடிய எழுத்து வடிவம் இல்லை என்கிறார் நாகசாமி. இது முழுக்க முழுக்கத் தவறானது. சமயோதயுக்த என்ற நூலில் பம்மி என்கிற எழுத்து வருகிறது. இந்த பம்மி என்பது பிராகிருதம். சமஸ்கிருதத்தில் பிராமி. இதே நூலில் தமிளி என்றும் வருகிறது என்று இவர் ஒரு கட்டுரையில் சொல்லியிருந்தார். பம்மியைக் குறிக்கின்ற அதே நூலில்தான் தமிளியும் குறிக்கப்படுகிறது. அப்படி என்றால் தமிழ்நாட்டில் எப்படி தமிழ் எழுத்து இல்லாமல் இருந்திருக்கும்.
அண்மையில் ஆதிச்சநல்லூர், நெடுங்குளம், கொற்கை, மாங்குளம், அழகன்குளம் உள்ளிட்ட இடங்களில் அகழ்வாய்வு செய்தபோது கிடைத்த பானை ஓடுகளில் எழுத்துகள் எழுதப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதே இடங்களில் கிடைத்த நெல் மணிகளைக் கொண்டு, அறிவியல் ஆய்வு செய்தபோது, அதன் காலம் கி.மு.490 என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படியயன்றால் கி.மு.5ஆம் நூற்றாண்டிலேயே தமிழ் எழுத்து வழக்கில் இருந்திருக்கிறது. அசோகரின் காலத்தில் பிராமணர்களால் உருவாக்கப்பட்டது என்று நீங்கள் சொல்லும் பம்மியின் காலம் கி.மு.3. இது கி.மு. 5 என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
இந்த உண்மைகளை எல்லாம் இவர் அறிந்திருக்கவில்லையா அல்லது வேண்டுமென்றே மறைக்கிறாரா? ஆதிச்சநல்லூரில் அருமையான தடயம் கிடைத்தது. அதில் முதுமக்கள் தாழியின் உள்பக்கம் எழுத்து எழுதப்பட்டிருந்தது. அதன் காலம் கி.மு. 400 என ஆய்வுகள் சொல்கின்றன. தமிழ் எழுத்தோடு கூடிய உரைகல் தாய்லாந்தில் கிடைத்திருக்கிறது. இவைபோன்ற கல்வெட்டுகள் வடநாட்டில் கிடைத்திருக்கிறதா? அங்கே அசோகனுக்கு முற்பட்ட காலத்தில் எழுத்தே கிடையாது என்கிறார் மெகஸ்தனிஸ். இதற்கு நாகசாமி போன்றவர்கள் முதலில் ஆதாரங்களைத் தேடட்டும். பிறகு தமிழைப்பற்றி பேசலாம்.
முனைவர் இராசேந்திரன் (முன்னாள் துணைவேந்தர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்)
டாக்டர் நாகசாமி, நிகழ்காலத் தேவைக்கேற்ப கடந்த காலத்தைக் கட்டமைக்க முயல்கிறார். நாகசாமியின் இது போன்ற செயல்களுக்குத் தமிழறிஞர்கள் ஏற்கனவே தக்க சான்றுகளோடு மறுப்புகளைச் சொல்லி, அதை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். அப்படி முடிந்துபோன மொழிப்பகையை இப்போது மீண்டும் மூட்டிவிட இப்போது என்ன தேவை வந்திருக்கிறது என்பதே நம் வினா.
இந்நூலின் முன்னுரையில், தமிழ் மொழிக்குச் செவ்வியல் தகுதி என்று எவை எவை சொல்லப்படு கின்றனவோ அவை எல்லாம் தமிழுக்குரியவை இல்லை என்கிறார். இவர்களின் பயணம் எதை நோக்கி என்பது நமக்குத் தெரிகிறது. ஒரு மொழி செம்மொழி என்பதற்கு, அந்த மொழியில் உள்ள நூல்கள் வேறு மொழியிலிருந்து உருவாக்கப்பட்டவையாக, மொழிபெயர்க்கப்பட்டவையாக இருக்கக் கூடாது என்பது அடிப்படைத் தகுதி. அந்தத் தகுதி தமிழுக்கு இருக்கிறது என்பது உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.
இந்தியாவைப் பொறுத்தவரை, ஆரிய இனம் - திராவிட இனம் என இரண்டாக இருந்திருக்கிறது. இந்த இரண்டு இனங்களுக்கான போராட்டத்தைக் காலம்காலமாக எடுத்துக்கொண்டு போயிருக் கிறார்கள். இன்று இந்த நெருக்கடி வந்திருக்கிறது. இந்நூலில் நாகசாமி, மொழியிலும், பண்பாட்டிலும் கைவைத்திருக்கிறார். இனத்தைத் தொடவில்லை.
மொழியில் எப்படி கைவைத்திருக்கிறார் என்றால், நீங்கள் உங்களுடைய தொன்மையான நூல் என்று சொல்கிற தொல்காப்பியத்தில் இருப்பவை எல்லாம் உங்களுடையவை இல்லை. எல்லாமே சமஸ்கிருதத்தில் இருந்து வந்தவை. எழுத்து மட்டும்தான் உங்களுடையது என்று நாகசாமி சொல்கிறார்.
எழுதாக் கிளவி என்று சமஸ்கிருதத்தைச் சொல்கிறார்கள். எழுதினால் வேதத்திற்குக் கற்பு போய்விடுமாம். சரி வேதத்தை எழுத வேண்டாம், இராமாயணம், மகாபாரத்தையாவது எழுதியிருக்கலாம் இல்லையா? இந்தியாவில் முதல் ஆவணம் என்பது தமிழில்தான் இருக்கிறது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.
தமிழ் நாட்டில் எழுதப்பட்ட பிராமி எழுத்துகளில் தமிழின் சிறப்பு எழுத்தான ‘ழ’கரம் மாறாமல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறதே எப்படி? சமஸ்கிருதத்திற்கு ஏற்கனவே எழுத்துவடிவம் இருந்திருக்குமானால், பல்லவர்கள் ஏன் கிரந்த எழுத்தை உருவாக்கினார்கள்? எழுத்து என்ற ஒன்று இருப்பதையே அவர்கள் இங்குவந்துதான் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.
அடுத்து பண்பாடு. அகத்திணை, புறத்திணை என்பதெல்லாம் உங்களுக்குக் கிடையாது. இவையயல்லாம் வேதங்கள், உடநிடதங்கள் மற்றும் நாட்டிய சாஸ்திரத்தில் இருந்து வந்திருக்கின்றன என்கிறார்.
பண்பாடு என்பது வாழ்வியல் முறை பற்றியது. ஆரிய வாழ்வியல் முறைக்கும், திராவிட வாழ்வியல் முறைக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. பண்பாடு என்பது வாழ்வியல் விழுமியங்களைப் பொறுத்தது. சிறப்பாகப் போற்றப்படுகின்ற விழுமியங்களை இலக்கணங்களில் பாடுபொருளாகக் காட்டுவது நம் மரபு. காதல் நம்முடைய பண்பாட்டு விழுமியங்களுள் ஒன்று.
‘ஆரிய அரசன் பிரகதத்தனுக்கு தமிழை அறிவுறுத்தும் பொருட்டு குறிஞ்சிப்பாட்டு பாடியிருக்கிறார் கபிலர் என்று சிலர் சொல்கிறார்களே, என்ன நியாயம்? அப்படியயன்றால், ஆரிய அரசனுக்கு அ, ஆவன்னா சொல்லிக்கொடுத்தாரா கபிலர்’ என்று தன்னுடைய கட்டுரை ஒன்றில் தமிழறிஞர் வ. அய். சுப்பிரமணியம் கேட்கிறார். அப்படியில்லை, தமிழை அறிவுறுத்தல் பொருட்டு என்றால், காதலை, அகப்பொருளை அறிவுறுத்தல் பொருட்டு என்று பொருள் என்றார்கள். அகப்பொருள் பாடுபொருளான காதல் என்பது சமஸ்கிருதத்தில் இல்லை என்கிறார் வ.அய். சுப்பிரமணியம். வடமொழியில் காதலைச் சொல்கின்ற ஒரே இலக்கியம் காளிதாசனின் சாகுந்தலை மட்டும்தான். அதுவும் காதலித்தால் வாழ்க்கை சோகத்தில் முடியும் என்று காட்டுகிறது. ஆனால் சங்க இலக்கியத்தில், எந்தப் பாடலும் காதல் சோகத்தில் கொண்டு விடும் என்று சொல்லவில்லை.
சித்திரை முதல் பங்குனி வரையான மாதங்களின் பெயர்கள் எல்லாம் சமஸ்கிருதத்திலிருந்து தமிழ் பெற்றுக் கொண்டவை என்கிறார். நமக்கு எழுகின்ற கேள்வி, சித்திரை நட்சத்திரத்தில் இருந்து சித்திரையும், விகாச நட்சத்திரத்தில் இருந்து வைகாசியும் இன்னபிற நட்சத்திரங்களில் இருந்து எஞ்சிய மாதங்களும் வந்தன என்கிறீர்களே, நட்சத்திரங்களின் பெயர்கள் இன்றும் மாறாமல் உச்சரிக்கப்படும்போது, அவை மாதப்பெயர் களாகும்போது மட்டும் மாறியது எப்படி?
சுருக்கமாகச் சொன்னால் நாகசாமி தன் விருப்பதை வெளிப்படுத்தி இருக்கிறார். அந்த விருப்பமானது, தமிழுக்கு விரோதமாக, உண்மைக்கு எதிரானதாக இருக்கிறது.
பேரா. மறைமலை இலக்குவனார்
சமஸ்கிருதம் என்பது பிராமணர்களுக்குரியது என்கின்ற மாயை உண்மையான அறிஞர்களுக்கு இருக்காது. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நான் பணியாற்றியபோது, அங்கிருந்த சமஸ்கிருதத் துறைத் தலைவரிடம், ‘என்ன கற்றுத் தருகிறீர்கள்’ என்று கேட்டேன். அவர் பாடத்திட்டத்தை எடுத்துக் காட்டினார். அங்கே அவர்கள் படிப்பது பவுத்த சமஸ்கிருதம் (Budhist Sanskrit). வடமொழிப் பட்டயப் படிப்பின் போது, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் கோசாம்பி மற்றும் மற்றொரு பேராசியருடன் உரையாடும்போது, கி.பி.13ஆம் நூற்றாண்டுக்கு முன்னதாக, இந்தியத் துணைக் கண்டத்தில், படைக்கப்பட்ட எல்லாக் காவியங்களும் தென்னாட்டிலே படைக்கப்பட்டவைதான் என்று சொன்னார்கள்.
பார்சன் என்றொரு மிகச்சிறந்த படைப்பாளி. இவர் உலக நாடகத் துறையின் முன்னோடி என்று சொல்லத்தக்க தகுதியுடையவர். அவருடைய படைப்புகள் எல்லாம், திருவனந்தபுரம் அரண் மனையில்தான் கிடைத்தன. இலக்கியங்களைப் படைப்பதற்கு மட்டுமல்ல, அவற்றைப் பாதுகாப்ப தற்கும் தென்னகம்தான் தளமாக இருந்திருக்கிறது.
வேதக் கடவுளைத்தான் தொல்காப்பியர் பின்பற்றியிருக்கிறார் என்கிறார் நாகசாமி. நமக்கு சமஸ்கிருதம் தெரியாது என்று நினைத்துக் கொண்டு அவர் எழுதியிருக்கிறார். சமஸ்கிருதம் பிராமணர்களால் மீட்டெடுக்கப்பட்டுவிட்டதே தவிர, அவர்களின் மொழி அன்று என்பதை சமஸ்கிருதத்தை நன்கு படித்தவர்கள் அறிவார்கள். இந்திரவிழா நடந்தது எங்கே? சோழநாட்டில்.
இன்னொன்றையும் சொல்ல வேண்டும். நம்முடைய தொன்மங்களை எல்லாம் இழிவான வையாகச் சித்தரித்து விட்டு, அவர்கள் உருவாக்கிய ராமனை மட்டும் ஒழுக்க சீலனாகக் காட்டி யிருக்கிறார்கள். எனவே அவர்கள் யாரையயல்லாம், எவற்றையயல்லாம் இழிவாகக் காட்டியிருக் கிறார்களோ, அவர்கள் எல்லாம், அவையயல்லாம் தமிழ்த்தொன்மம்தான் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அறிஞர் ஜார்ஜ் ஹாட் நாகசாமியின் கருத்தைக் கடுமையாக மறுக்கிறார். அறிஞர் மிக்கேல் விட்ஸ்செட், ‘நாகசாமி சமஸ்கிருதத்தை நன்றாகப் படிப்பது நல்லது ’ என்கிறார். நாமும் சொல்கிறோம், முதலில் தமிழையும் நன்றாகப் படியுங்கள்.
பெ. மணியரசன் (பொதுச்செயலார், தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சி)
ஒரு சிறந்த கருத்தரங்கம் இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ‘எம்முளும் உளன் ஒருவன் பொருநன்’ என்கிறது புறநானூறு. அப்படி ஒரு போராளி அன்று, பல அறிஞர்கள், அறிவாயுதங்களை, கருத்தாயுதங்களை ஏந்தி வந்து இங்கே போர் முழக்கம் செய்திருக்கிறார்கள். நாகசாமி மொழியோடு நின்றுவிடவில்லை. அவருடைய அடித்தளம் இனப்பிரச்சினைதான். அவர் சொல்கிறார், தமிழும், சமஸ்கிருதமும் ஒன்றாகத்தான் இருந்தன, கொடுத்து வாங்கிக் கொண்டு இருந்தன. 50 ஆண்டுகளாகத்தான் வெவ்வேறானவை என்று பேசப்பட்டது. இந்த 50 ஆண்டுகள் என்றால் எது? தி.க., தி.மு.க. இவை ஓங்கி வளர்ந்த காலம். அதாவது, ஆரியத்திற்கு எதிராக இனப்போராட்டம் ஓங்கி வளர்ந்த காலம். இவருக்கு நாம் பதில் சொல்வதால் இவருக்கு விளம்பரம் தருகிறோம் என்று கருதவேண்டியதில்லை. இது ஓர் ஆதிக்க இனக் கருத்தியலை எதிர்ப்பது. இந்த எதிர்ப்புகள் பல வகைகளில் இருக்க வேண்டும். அறிவுத்தளத்தில், அரசியல் களத்தில் இந்த எதிர்ப்புகள் எழவேண்டும். தமிழ் உணர்வாளர்கள் நடத்துகின்ற ஏடுகள் இக்கருத்தை அதிகமாகப் பரப்புரை செய்ய வேண்டும். எங்களைச் சீண்டினால் நாங்கள் திருப்பி அடிப்போம் என்பதை அவர்களுக்குச் சொல்ல வேண்டும்.
தமிழை dialect என்கிறார் நாகசாமி. பழங்குடி மொழியின் கிளைமொழியாக இருந்தது. சமஸ்கிருதம் வந்துதான் அதைச் செம்மொழியாக வளர்த்தது என்கிறார். எல்லா மொழிகளும், ஒரு காலத்தில் dialectஆக இருந்திருக்கும்தான். ஆனால் சமஸ்கிருதம் மொழியாகிவிட்ட காலத்திலும்கூட தமிழ் dialect ஆகவே இருந்தது என்று சொல்வதற்கு நாகசாமிக்கு எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும். எத்தனை ஆயிரமாண்டுகள் ஆனாலும், ஆரியம் என்பது தமிழர்களுக்கு எதிரான கருத்தியல் என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது.
முனைவர் பூங்குன்றன், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முதுமுனைவர் இளங்கோ, முனைவர் ஜெயதேவன், பேராசிரியர் அரசேந்திரன், எழுத்தாளர் கோவை ஞானி, முனைவர் மதிவாணன், புலவர் கி.த. பச்சையப்பன் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் நாகசாமியின் கருத்துகளை சான்றுகளோடு மறுத்து உரையாற்றினார்கள்.
ஆரிய மாயை குறித்த விழிப்புணர்வினை மீண்டும் மக்களிடத்தில் பரப்புரை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.
தொகுப்பு: இரா.உமா

பூனக்குட்டி வெளிய வந்திருச்சி...! ---- இரா.உமா

‘உள்ள யாரு, வெளிய நாங்க...உள்ள யாரு...வெளிய நாங்க...வெளிய நாங்க... உள்ள நீங்க...ஆனா யாரு நீங்க...வெளிய நாங்க...உள்ள நீங்க...நீங்க நீங்கதான்...நாங்க நாங்கதான்...நாங்க நாங்கதான்...நீங்க நீங்கதான்... த்தூ...இன்னிக்கு டீ குடிச்சா மாதிரிதாண்டா...’ (கவுண்டமணி ஸ்டைலில் படிக்கவும்)
anna_hazare_ramdevஇதே மாதிரி உள்ளே வெளியே ஆடி முடிச்சி, இப்ப நின்னு ஆடுறதுக்காக ஒரு எடத்தத் தேர்ந்தெடுத்துட்டாரு நம்ம உண்ணாவிரதம் புகழ் அன்னா அசாரே. அதாங்க அந்நியன் அசாரே அரசியல்ல குதிக்கப் போறதா அறிவிச்சிருக்காரு.
ஊழல ஒழிக்கறதுக்காகவே அவதாரம் எடுத்திருக்கேன்னு சொன்னாரு. யாரோட ஊழல ஒழிக்க...இந்திய அரசியல்வாதிகளோட ஊழல. புது மாப்பிள்ளைக்கு என்னிக்குமே மவுசு கூடுதலாத்தான் இருக்கும். அப்படித்தான் மக்களும் இவரோட காந்தி குல்லாயப் பாத்து உண்ணாவிரதத்துல குத்த வக்கிறப்போ எல்லாம் குமிஞ்சாங்க. இவரும் காந்தி மாதிரியே கதராட கட்டிக்கிட்டு, தேசியக் கொடிய வேற ஆட்டிக்கிட்டு காத்தாட ராம்லீலா மைதானத்துல அப்படியே சாஞ்சிக்கிட்டும், படுத்துக்கிட்டும் போராடினாரு. நாங்கல்லாம் ஒரு செட்டுன்னு ஜூனியர் பாலையா கரகாட்டக்காரன் படத்துல சொல்வாரே, அத மாதிரி முன்னாள், இன்னாள்னு பலபேரு சேர்ந்து, அன்னா அசாரே குழுன்னு ஒன்ன உண்டாக்கிக்கிட்டாங்க.
ஊழலப் பத்திப் பேசுற இந்தியன் தாத்தா, ஏன் கருப்புப் பணத்தப் பத்திப் பேசமாட்டேங்குறாரு, அதிகார மையங்களா இருக்குற பெருமுதலாளிங் களைப் பத்தி ஏன் பேசமாட்டேங்குறாரு, பழங்குடி மக்கள் இந்திய அரசால வேட்டையாடுறதைப் பத்தியோ, அரசாங்கத்தோட அணுசக்திக் கொள்கையைப் பத்தியோ பேசாம, சேனங்கட்டுன குதிரை மாதிரி ஏன் லோக்பால் பின்னாடியே ஓடிட்டிருக்காரு - இப்பிடி பல ஏன்கள் எழுப்பப்பட்டு, ஒரு வழியா அவரோட நிலையற்ற தன்மை வெளிச்சத்துக்கு வந்துச்சி. மக்கள் பாத்தாங்க... ஆஹா... இது இயற்கையான வெளிச்சம் கிடையாது... சில ஊடகங்கள் ஊதி ஊதி ஏற்படுத்துன பெட்ரோமாக்ஸ் வெளிச்சம்னு புரிஞ்சிக் கிட்டாங்க. மெல்ல மெல்ல அசாரேவோட கடையில் கூட்டம் குறைஞ்சி, ஈயோட்டுற நெலம வந்ததும், அரசியல் மெளகாப் பொடியப் போட்டுப் புதுசாப் பலகாரம் சுடத் தொடங்கிட்டாங்க. இதாங்க கதச்சுருக்கம்.
‘எம் பொண்டாட்டி தாலியறுத்தா என்ன, எங்கம்மா கிட்ட கஞ்சி குடிப்பேன்’னு சொன்னானாம் ஒருத்தன். அரசியல்ல ஊழல் புரையோடிக் கெடக்குது, ஆனாலும் நாங்க அரசியல்ல குதிக்கப் போறோம்னு கெளம்பியிருக்காங்க போலத் தெரியிது.
சரி, ஒரு வழியா பூனைக்குட்டி வெளிய வந்திருச்சி. அது பால் குடிக்குமா குடிக்காதான்னு, பால் பாத்திரத்துக்குப் பக்கத்துல போகும்போது தெரிஞ்சிட்டுப் போகுது.
“லோக்பால் இயக்கம் ‘முழுப் புரட்சிக்கான’ இயக்கமாக மாற்றப்பட்டு விட்டதுன்”னு அரவிந்த் கெஜ்ரிவால் சொல்லியிருக்காரு. 1975இல் ஜெயப்பிரகாஷ் நாரயணன், இந்திரா காந்தியோட அரசுக்கு எதிரா ‘முழுப்புரட்சி இயக்கம்’னு ஒன்ன தொடங்குனாரு. ஜெயப்பிரகாஷ் நாராயணனோட இயக்கத்த, ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கம் உள்ளிட்ட இந்துத்துவ சக்திங்க சாதகமாகப் பயன்படுத்திக் கிட்டாங்க. அதமாதிரி மறுபடியும் ஒரு நெலய உருவாக்குற முயற்சிதான் லோக்பால் குழு முழுப்புரட்சிக் குழுவா மாறுனதுன்னு நெனைக்க எடமிருக்கா இல்லையா?
ஏன்னா, எத்தன காலத்துக்குத்தான் அயோத்தி ராமனக் காட்டி மக்கள ஏமாத்த முடியும் சொல்லுங்க! அசாரே கூட்டம் அப்பப்ப பா.ஜ.க.வோட பழம் விடுறது, அப்புறம் கா விடுறது எல்லாமே ...ச்சும்மா... லூலூலாயிக்கு. அந்தக் கூட்டத்துல இருக்குற அத்தன பேரும் அக்மார்க் ஆர்.எஸ்.எஸ். மாணவர்கள்னு நமக்குத் தெரியாதா என்ன?
“தேர்தல் வருது, இந்த நேரத்துல உண்ணாவிரதம் இருந்து ஏன் நேரத்த வீணாக்கனும்”னு அசராம அடிச்சிருக்காரு பாருங்க அசாரே...! இவரல்லவோ அரசியல்வாதி! ஏறத்தாழ பன்னென்டு மாசத்துக்கும் மேல ராம்லீலா மந்தையில குந்தியிருந்து நேரத்த வீணாக்குன மக்களுக்கு என்னமா குல்லா போட்டாரு பாத்தீங்களா...!
“அன்னா அசாரே குழு கட்சி தொடங்கும்னு” கெஜ்ரிவால் சொல்றாரு. “அரசியல் கட்சி தொடங்கவும் மாட்டேன். எந்தக் கட்சியிலும் சேரவும் மாட்டேன். தேர்தலில் நிற்கவும் மாட்டேன்”னு தல சொல்றாப்ல. உஷ்ஷ்...அம்மாடி... இப்பவே கண்ணக் கட்டுதே!

எழுத்தாளர் பிரியா பாபுவுடன் கலந்துரையாடல் ----- இரா.உமா

மார்ச் 8 - பெண்கள் நாள் 
தனக்கென ஓர் அடையாளம், ஓர் ஏற்பிசைவு(அங்கீகாரம்), உரிமை இல்லாமல், எந்த ஒரு மனித உயிரும் இப்பூமிப்பந்தில், தன்மதிப்புடன் வாழ முடியாது. குறைந்தது, மனிதருள் தான் ஒரு பெண் அல்லது ஆண் என்கின்ற ‘பால் அடையாள உரிமை’யாவது வேண்டும். ஆனால் இப்படி எந்த உரிமையும் இன்றி ஒரு சமூகம் - மாற்றுப்பாலினத்தவர் எனப்படும் திருநங்கையர் நம்மிடையே வாழ்ந்து வருகின்றனர்.
priyababu_370உலகின் போக்கில் நிகழ்ந்து வருகின்ற பெரும்பாலான மாற்றங்களை ஏற்றுக் கொள்கின்ற மனித சமூகம், இயற்கையாக உடற்கூறில் நிகழும் சிறு மாற்றத்தின் விளைவான மாற்றுப்பாலினத்தவரை மட்டும் இன்றுவரை ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறது. மண்ணைக் கீறி வெளிவரும் விதைகளைப் போல, வலிகளைக் கீறி எழுந்து, பல துறைகளிலும் வெற்றிவாகைசூடி வருபவர்களுள் குறிப்பிடத்தக்கவர் திருநங்கை பிரியாபாபு.
ஒரு காலைப் பொழுதில் அவருடைய வீட்டில் சந்தித்து உரையாடியபோது, தான் எதிர்கொண்ட வாழ்க்கைப் போராட்டங்களையும், தன்னுடைய சமூகத்திற்குத் தான் செய்து வரும் பணிகளையும், மாற்றுப்பாலினத்தவர் குறித்தும் பல செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்.
பிரியா தன்னை ஓர் எழுத்தாளர் என்று அடையாளப் படுத்திக் கொள்ளவே விரும்புவதாகக் கூறுகிறார். மும்பையில் வாழ்ந்தபோது, கடைகேட்கச் சென்ற இடத்தில், மும்பை தினபூமி நிருபர் ஒருவரின் அறிமுகம் கிடைக்கிறது. அவரின் ஊக்கப் படுத்துதலில், ‘விடியலை நோக்கி அலிகள்’ என்ற தொடரை தினபூமியில் எழுதியதாகவும், அதில் பல செய்திகளை வெளிப் படையாக எழுதியதால், திருநங்கையர் சமூகத்தில் இருந்தே தான் வெளியேற்றப்பட்டதாகப் பிரியா கூறும்போதே, அவருடைய சிந்தனை ஓட்டம் எப்படி இருந்திருக்கும் என்பது, அவருடைய அடுத்தடுத்த செயல்பாடுகள் குறித்து நம்மிடம் பேசியபோது புரிந்தது.
‘முக்தாம்பர் டிரஸ்ட்’ நடத்திவந்த ஜி.ஆர்.கேர்னரின் அறிமுகம் தன்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியதாக நன்றியோடு நினைவுகூர்கிறார். அந்த டிரஸ்ட்டில் வேலை செய்த போதுதான், கள ஆய்வு, அலுவலக நிர்வாகம் பற்றிய பயிற்சி தனக்குக் கிடைத்தது என்றார். தன்னைப் பற்றி அங்குள்ள பத்திரிகைகளில் செய்திகள் வந்தபிறகு, பல திருநங்கைகள் இதுபோன்று வேலை செய்ய முன்வந்ததைக் குறிப்பிட்டார்.
பிறகு, ஒத்த கருத்துடைய திருநங்கைகளை ஒருங்கி ணைத்து, Dai welfare society என்ற அமைப்பையும் நடத்தி யிருக்கிறார். அதோடு, Mumbai district Aids control society உடன் இணைந்து, எய்ட்ஸ் உள்ளிட்டப் பல்வேறு விழிப்புணர்வுப் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருக்கிறார்.
‘பாலின அடையாளம் தவிர்த்து வேறு என்ன மாதிரியான புறக்கணிப்புகளைச் சந்திக்க நேர்கிறது’ என்று கேட்டபோது, சென்னையிலும், திருச்சியிலும் எச்.ஐ.வி தொடர்பான சமூகப் பணிகளைச் செய்தபோதுதான், சாதி வேறுபாடு என்னும், சமூகத்தின் மற்றொரு கொடுமையான பக்கத்தை உணர்ந்ததாகக் கூறுகிறார். இவற்றையயல்லாம் பார்த்தபோது, தான் செய்ய வேண்டிய வேலைகளின் எல்லைப் பரப்பு அதிகம் என்பதை உணர்ந்து, அதற்காக ஓர் அமைப்பை உருவாக்கிப் பதிவு செய்யச் சென்றபோது, இன்னொரு புதிய சிக்கலையும் எதிர்கொள்கிறார். பதிவாளர், அடையாளச் சான்று இருந்தால்தான் பதிவு செய்ய முடியும் என்று கூறிவிடுகிறார். ‘அடையாளம் ஏதுமற்று நின்ற அந்த நிமிடம், நெருப்பின் மீது நிற்பது போன்று தன்னைச் சுட்டெரித்ததாக’ சொன்னார்.
 ‘அடையாளச் சான்றுச் சிக்கலை எப்படி எதிர்கொண்டீர்கள்?’ என்று கேட்டோம்.
‘வழக்கறிஞர் ரஜினியின் அறிமுகம் கிடைத்தது. அடையாளச் சான்று சிக்கலைப் பற்றி அவரிடம் சொன்னோம். அப்போது 2004 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அடையாள அட்டைக்கான எங்களின் கோரிக்கையை முன்வைக்க இதுதான் சரியான நேரம் என்பதை உணர்ந்தோம்.
2003, மார்ச் 6 ஆம் தேதி நானும், வழக்கறிஞர் ரஜினியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தாக்கல் செய்தோம். அதில் திருநங்கைகளுக்கு வாக்குரிமை வேண்டும் என்று கேட்டிருந்தோம். நீதிபதி சுபா­ன் ரெட்டி முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இப்படி ஒரு நிலை இருப்பது இதுவரை தனக்குத் தெரியாது. இது புது செய்தியாக உள்ளது. எனவே உலககெங்கும் இருக்கின்ற இது தொடர்பான செய்திகளைத் திரட்டித் தனக்குத் தந்தால்தான், சரியாக வழக்கு விசாரணையை நடத்த முடியும் என்றார். நாங்களும் கொடுத்தோம். தீர்ப்பு நாங்கள் விரும்பியபடியே கிடைத்தது. “திருநங்கைகள் தாங்கள் விரும்பும் பாலினத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்” என்று சுபா­ன் ரெட்டி தீர்ப்பளித்தார்”. இது சட்டத்தின் துணையோடு நாங்கள் அடைந்த முதல் வெற்றி’ ‘தீர்ப்புக்குப் பிறகு உங்கள் அனைவருக்கும் அடையாளச் சான்று கிடைத்ததா?’ என்று கேட்டபோது, ‘அனைவருக்கும் என்று சொல்ல முடியாது. ஆங்காங்கே ரே­ன் அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள் பலருக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதிலும் பாலின அடையாளத்தைக் குறிப்பதில் குழப்பம்தான் ஏற்பட்டுள்ளது. காரணம் புள்ளிவிவரங்களைச் சேகரிக்க வரும் அதிகாரிகளுக்கு வரையறுக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அரசு கொடுக்க வில்லை. எங்கள் போராட்டமும் ஓயவில்லை’ என்றார்.
‘சரி, சாதாரண மக்களோடு கலந்து பழகுவதில், அவர்களுக்கு நடுவில் வாழ்வதில் என்ன மாதிரியான சிக்கல்களை எதிர்கொள்ள நேர்கிறது’ என்ற போது, முன்னைக்கு இப்போது கொஞ்சம் நல்ல மாற்றம் தெரிவதாகச் சொன்னார்.
‘எங்களுக்கும் மக்களுக்குமான இடைவெளியைக் குறைக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். அதற்காகக் கண்ணாடிக் கலைக்குழு என்ற நாடகக் குழுவை நடத்தி வருகிறோம். இந்தியாவின் முதல் திருநங்கைகள் நாடகக் குழு இதுதான். எங்களோடு அ.மங்கை, மீனா சுவாமிநாதன், சிவகாமி ஐ.ஏ.எஸ். மற்றும் பல ஊடகத் துறை நண்பர்கள் எப்போதும் இணைந்திருக்கின்றனர்.’
இந்தச் சமூகம் கொடுத்த ஒவ்வொரு அடியும், பல அடிகள் அவருடைய செயல்பாடுகளை முன்னே உந்தித் தள்ளியிருக்கிறது.
 முக்கியமாகக் குடும்பங்களின் புறக்கணிப்புத் தங்களின் வேதனையைப் பன்மடங்கு அதிகரிப்பதாகச் சொல்கிறார். அதிலும் உடன்பிறந்த ஆண்களும், தந்தையும்தான் மிகக் கடுமையாக நடந்துகொள்கின்றனர் என்று தெரிவிக்கிறார். தன்னுடைய அண்ணன்கள் இன்றுவரை தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அக்காவும், அவருடைய வீட்டினரும் நல்ல தொடர்பில் இருப்பதாகவும் வேதனையோடும் மகிழ்ச்சியோடும் பகிர்ந்து கொள்கிறார். தன்னுடைய அம்மா எப்போதும் தனக்கு ஆதரவாகத் தன்னுடனே இருப்பதால்தான், தன்னால் போராடி வெற்றி பெற முடிந்தது. இதுபோன்ற ஆதரவு கிடைத்தால், ஒவ்வொரு திருநங்கையும் வெற்றியாளராக முடியும் என்பது அவருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
பிரியாபாபு தனக்கு ஆன்மிக நம்பிக்கை உண்டென்றாலும், பெரியாரின் மனித நேயக் கொள்கைகள் தன்னை மிகவும் ஈர்த்திருக்கின்றன என்று சொல்கிறார். தன்னுடைய சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், விடியலுக்காகவும் தன் வாழ்நாளை செலவழித்துக் கொண்டிருக்கும் பிரியாவின் படைப்புகள், திருநங்கைகளின் வரலாற்று ஆவணங்களாக இருக்கின்றன.
2008இல் அரவாணிகள் சமூக வரைவியல், 2009இல் மூன்றாம் பாலின் முகம், 2012இல் தமிழகத்தில் திருநங்கையரின் சமூக வரலாறு என்னும் நூல்களை எழுதியிருக்கிறார். மேலும், ‘தமிழகத்தில் திருநங்கையர் வழக்காறுகள்’, ‘திருநங்கைகள் வாழ்க்கையும் அவர்களின் வழிபாடும்’ ஆகிய தலைப்புகளில் ஆவணப் படங்களையும் எடுத்திருக்கிறார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின், ‘க.சமுத்திரம் விளிம்புநிலை மக்கள் இலக்கிய விருது’ உள்படப் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். இவரின் தன்னலமற்ற சமூக சிந்தனைக்குச் சிகரம் வைத்ததுபோல, திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம், ‘பெரியார் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. பெரியார் விருது பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமைக்குரியவர் இவர்.
அவருக்கு வாழ்த்துகளையும், என்றென் றைக்குமான நம்முடைய ஆதரவினையும் தெரிவித்துக் கொண்டு விடைபெற்றுப் புறப் படும்போது, அவரும், அவருடைய பெருமைக் குரிய அம்மாவும், மானு உள்ளிட்ட இன்னும் சில திருநங்கையர் தோழிகளும் அன்போடு வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தனர்.
நம்புங்கள் மனிதர்களே அவர்களும் மனிதர்கள்தான்!

சமூகநீதியைப் பேசும் மனுநீதி --- இரா.உமா

                                                                                                 இரா.உமா
mohan-bhavat 350“சமத்துவமின்மை இருக்கும் வரை தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும்” என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறார்.
இது, பூனை சைவமாகிவிட்டேன் என்று சொல்வதைப் போல இருந்தாலும், மனுநீதி பேசிய வாயால், சமூகநீதி பேச வேண்டிய சூழல் உருவாகி யிருப்பதையே இது உணர்த்துகிறது.
திராவிடர் கழகத் தலைவர் சொன்னதுபோல, ‘இது பெரியார், அம்பேத்கர் கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றி’.
பத்து ஆண்டுகள் வனவாசத் திற்குப் பிறகு, நாடாளுமன்றத்தின் படிகளுக்கு முன் விழுந்து வணங்கி, ஆளும் கட்சியாக நுழைந்ததில் இருந்தே, பா.ஜ.க.வின் ‘அகண்ட பாரத’ நடவடிக்கை தொடங்கிவிட்டது.
சார்க் நாடுகளின் தலைவர்களை அழைத்துப் புதுமை செய்கிறேன் என்ற பெயரில், ஈழத்தில் தமிழினப் படுகொலை புரிந்த ராஜபக்சேவைப் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்தது, காஷ்மீர் சிறப்புச் சட்டத்தை ரத்து செய்ய முயல்வது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீருவோம் என்று முழங்குவது, இந்தி ஆட்சி மொழி - சமற்கிருதம் ஆதிக்க மொழி என்று நிறுவ ‘சமற்கிருத வாரம்’ கொண்டாடச் சொல்வது என்பன உள்ளிட்ட பா-.ஜ.க.வின் தொடர் இந்துத்துவச் செயல் பாடுகள் பல ஐயப்பாடுகளை ஏற்படுத்துகின்றன.
இந்நிலையில், ‘வருணாசிரம தர்மத் தை’யும், ‘மனுநீதி’யின் சட்டங்களையும் அடிப்படையாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் ., இடஒதுக்கீடு வேண்டும் என்று பேசி யிருப்பது ஐயத்தோடு கூடிய வியப்பைத் தருகிறது. இதற்கு சில நாள்களுக்கு முன்புதான், ‘இந்தியா இந்துக்கள் நாடு’ என்று கூறினார் மோகன் பகவத். இதற்கு பா.ஜ.க., உள்பட இந்துத்துவ சக்திகள் அனைத்தும் ஆதரவுக் குரல் கொடுத்தன.
இன்று நிலவும் சமூக சமத்துவ மின்மைக்குக் காரணம், இந்து மதத்தின் வருணாசிரமமும், அது வலியுறுத்தும் சாதி ஏற்றத் தாழ்வுகளும்தான். அந்த வருணா சிரமத்தைத் தாங்கிப் பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவர், ‘சமத்துவமின்மை இருக்கும் வரை தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு தேவை’ என்கிறார். அப்படியானால் ஆர்.எஸ்.எஸ். சமூக சமத்துவத்தை ஏற்றுக் கொள்கிறதா?
மோகன் பகவத் கூறிய சமத்துவ மின்மையில், பால் சமத்துவமின்மையும் அடங்குமா? ஆம் என்றால், ஆர்.எஸ்.எஸ். சின் பினாமியாக நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் பா.ஜ.க-. அரசு, நாடாளுமன்றத்தில், பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீட்டைச் சட்ட மாக்க, ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கலாமா? அப்படியே மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டையும் பாராதி ஜனதா அரசு நிறைவேற்றுமா?
கேரளாவில் சீர்திருத்தப் பெரியார் அய்யன்காளி நினைவுநாள் நிகழ்ச்சியில் பேசிய இந்தியப் பிரதமர் மோடி, “ஒரு பிராமணருக்குக் கிடைக்கும் அதே வேலை, தற்போது தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கும் கிடைக்கிறது. ஆனால், இதன் மூலம் சமத்துவம் கிடைத்து விட்டதாகக் கருத முடியுமா? சமூகத்தின் இறுதி இலக்கு நல்லிணக்கம்தான்.
இதற்காக நிலையான விழிப்புணர்வு கொண்ட சமூகம் நமக்குத் தேவை” என்று பேசியிருக்கிறார். பிராமணருக்குக் கிடைக்கும் அதே வேலை, தலித்துக்கும் கிடைக்கிறது என்றால், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதற்கு ஏன் இத்தனை எதிர்ப்புகள்? இந்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான, தொடர்வண்டித் துறையும், மாநில அரசுகளின் உள்ளாட்சி நிர்வாகமும் மனிதக் கழிவுகளை அகற்றும் வேலைக்குத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்புவது ஏன்-?
இதைப் பேசிய பிரதமர் மோடியின் சிந்தனை எப்படிப்பட்டது தெரியுமா? ‘தலித்துகள் தூய்மைப் பணி செய்வதை, இந்தச் சமூகத்தின் மற்றும் கடவுளின் மகிழ்ச்சிக்காக செய்யும் கடமையாகக் கருதவேண்டும். இதைக் கடவுளுக்குச் செய்யும் சேவையாகக் கருதி ஆனந்தத் துடன் செய்ய வேண்டும்’ என்று ‘கர்மயோக்’ என்னும் தன்னுடைய புத்தகத்தில் சொல்லியிருக்கிறார். இது வருணாசிரமம் தந்த சனாதனத் திமிர் அல்லவா? இதற்கும் கேரளாவில் அவர் பேசிய பேச்சுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?
தன் பிம்பத்தை ஊதிப் பெருக்கிக் காட்ட ஊடகங்கள் இருக்கிற துணிச்சலில் மோடி இப்படிப் பேசித்திரி கின்றார். நாடாளுமன்றத் தேர்தலின் போது, மோடி பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் என்பதைக் கூடுதல் தகுதிகளில் ஒன்றாக அக்கட்சியினர் முன்வைத்துப் பிரச்சாரம் செய்தனர். கலயம் மண்ணால் ஆனதா, பொன்னால் ஆனதா என்பதில் சிக்கலில்லை. அதன் உள்ளே இருப்பது தண்ணீரா, நஞ்சா என்பதுதான் இங்கே முக்கியம். மோடியின் உள்ளடக்கம் பார்ப்பனீயச் சிந்தனைதான் என்பதற்கு ‘கர்மயோக்’ சான்று. அதன்படி, ‘பேசும் நா இரண்டு’டையவர்தான் மோடி என்பதற் குக் கேரளாவில் பேசிய பேச்சு சான்று.
மோகன் பகவத் இடஒதுக்கீடு வேண்டும் என்பதையும், பார்ப்பனர்களுக்குக் கிடைக்கும் அதே வேலை தலித்துகளுக்கும் கிடைக்கிறது என்னும் மோடியின் பேச்சையும் பார்க்கும் போது, தந்தை பெரியார் விடுத்த எச்சரிக்கைதான் நினைவுக்கு வருகிறது. ‘வைதீகப் பார்ப்பானைக் கூட நம்பிவிடலாம், லௌகீகப் பார்ப்பானை நம்பக்கூடாது’.